அரசியல்

`நான் எங்கே வேண்டுமானாலும் போவேன்; அதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’- போலீஸிடம் சீறிய சி.வி.சண்முகம்!

காமதேனு

‘நான் எங்கே வேண்டுமானாலும் போவேன். அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என வழிமறித்த காவலர்களிடம் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கோபத்துடன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விதிகளுக்கு முரணாக தகுதிச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அந்த மருத்துவக் கல்லூரி தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவக் கல்லூரி தாளாளர் ஐசரி கணேஷ், கல்லூரியின் டீன் ஸ்ரீநிவாசராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக் காரணமாக ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் சென்னையில் ஐந்து இடங்கள், சேலத்தில் மூன்று இடங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அதுபோல் எல்இடி விளக்கு வாங்கியதில் முறைகேடு செய்ததாகக் கோவையில் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் சோதனை நடைபெறும் சி.விஜயபாஸ்கர் வீட்டிற்குச் செல்ல அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் காரில் வந்திருந்தார். அப்போது வழியில் மடக்கிய காவல்துறையினர் அவரை அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நீங்க எங்கே போகிறீர்கள் எனக் காவலர்கள் கேட்டனர். அதற்கு ‘நான் எங்கே வேண்டுமானாலும் போவேன். உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது ஜனநாயக நாடுதானா?’ என சி.வி.சண்முகம் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT