திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர் சந்திப்பு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர் சந்திப்பு 
அரசியல்

‘கெளபாய் போல மாறிவிட்டார் பிரதமர் மோடி...’ திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடும் விமர்சனம்

காமதேனு

மணிப்பூருக்கு செல்ல தயாராக இல்லாத பிரதமர் மோடி, யானை சவாரி செய்ய மட்டும் தயாராக இருப்பதாகவும், அவர் கெள்பாய் போல் மாறிவருவதாகவும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

தஞ்சையில் பெரியார் மணியம்மை பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு பெரியார் மற்றும் மணியம்மை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மணியம்மையாரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியார் மணியம்மை சிலைகள்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் போகப் போக தெரியும். ஏற்கனவே ஒரு வழக்கு வந்த போது தேர்தல் ஆணையர்களை அவர்கள் விரும்புகிற போது அவர்கள் விரும்புகிற அளவிற்கு 7 முதல் 8 தடவை பதவி நீட்டிப்பு கொடுத்ததை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு அரசியல் சட்டப்படி குறிப்பிட்ட காலம் அவர்கள் பதவியில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். எனவே இந்த நியமனங்கள் சரியில்லை. புதிய நியமனம் வேண்டும் என்று சொன்னதை, அரசு ஏற்கவில்லை. அவர்கள் கருதியபடி தேர்தல் பத்திரத்தில் எப்படி மோடி அரசு செய்ததோ, அதேபோல் இதையும் தன் வசம் செய்து இருக்கிறார்கள். அது ஒரு மர்ம கதையாக இருக்கிறது.” என்றார்.

மணியம்மையாரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு கி.வீரமணி மரியாதை

மேலும், “சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைத்திருப்பதற்கு தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள். திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு முடிவு. தேர்தல் கூட்டணி குறித்து பாஜக கதவு திறந்து இருக்கிறது, வாருங்கள் எனக் கூறினார்கள். கதவு திறந்தாலும், ஜன்னல் திறந்தாலும், கதவையே கழட்டி வைத்தாலும் கட்டிடத்தையே திறந்து வைத்தாலும் அவர்களை சீண்டுவதற்கு ஆட்கள் கிடையாது” என்றார்.

மணியம்மையாருக்கு மரியாதை செலுத்த குவிந்த பெரியாரிய உணர்வாளர்கள்

தொடர்ந்து பேசிய அவர், “மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். மிகப்பெரிய மருத்துவர் அடிக்கடி ஒரு இடத்திற்கு வருகிறார் என்று சொன்னால், நோய்கள் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். தமிழகத்தை பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரை பாஜக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. கூட்டணியே இல்லாதபோது 370 வெற்றி, 377 வெற்றி என கூறியிருககிறார்கள். இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? கதவு திறந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன? புலிக்கு பயந்தவர்கள் எல்லாம், என் மீது வந்து விழுங்கள் என சொல்வார்கள். அந்த கதைதான் தற்போது. மணிப்பூருக்கு செல்ல பிரதமர் தயாராக இல்லை. ஆனால் யானை மீது சவாரி செய்ய தயாராக இருக்கிறார். அவர் ஒரு கௌபாய் போல மாறி இருக்கிறார்” என்றார்.

SCROLL FOR NEXT