அரசியல்

தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம்

காமதேனு

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட தென் மாநிலங்களில் பிரதமர் மோடி நாளை முதல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனகதாசர் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மோடி, நாளை(நவ.11) மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்பட உள்ள தென்னகத்தின் முதல் 'வந்தே பாரத்' ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், ரூ.5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட பெங்களூரு கெம்போகௌடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தையும், பெங்களூருவில் கெம்பே கௌடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பின்னர் நாளை பிற்பகலில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.அங்கு இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். இரண்டாம் நாளாக (நவ.12) பிரதமர் மோடி ஆந்திரா செல்கிறார். விசாகப்பட்டினத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். மேலும், ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் இடையே ரூ.3,750 கோடியில் அமைக்கப்படும் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தெலங்கானாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, ராமகுண்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட யூரியா உரத்தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்ற உள்ளார்.

SCROLL FOR NEXT