அரசியல்

`ஜெயலலிதாவை பற்றி நாகூசும் வார்த்தைகளை அமைச்சர் பேசியிருப்பது வெட்கக்கேடான செயல்'- ஓபிஎஸ் காட்டம்

காமதேனு

"ஜெயலலிதாவை பற்றி நாகூசும் வார்த்தைகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியிருப்பது வெட்கக்கேடான செயல்'' என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஜெயலலிதாவின் ஆளுமைத் திறனை அறிந்த எம்ஜிஆர் தான், அவரை அரசியலில் அறிமுகம் செய்து வைத்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை 4 முறை ஆட்சியில் அமரவைத்த பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா தான். ஜெயலலிதாவை அறிமுகம் செய்து வைத்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியது கேலிக் கூத்தாக உள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது.

நாகூசும் வார்த்தைகளை ராமச்சந்திரன் பேசியிருப்பது வெட்கக்கேடான செயல். தன்னுடைய தரம் தாழ்ந்த பேச்சின் மூலம் அமைச்சர் பதவிக்கு இழுக்க தேடிக் கொடுத்து இருக்கிறார் ராமச்சந்திரன். இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் செம்மை புரிவது ஒழுக்கம் என்பதை மனதில் கொண்டு நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதையும் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதையும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில், யாகவா ராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப அமைச்சர் நடந்து கொள்வது தான் அவரது பதவிக்கு அழகு' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT