அரசியல்

ஓபிஎஸ்சை யாரும் ஓரங்கட்டவில்லை: பதிலடி கொடுக்கும் பா.வளர்மதி!

காமதேனு

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் ஓரங்கட்டவில்லை என முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை முழக்கம் அக்கட்சியினரிடையே பெரும் மோதலை உருவாக்கியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டைத்தலைமையை வலியுறுத்தி வருகிறார். ஆனால், முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஒற்றைத்தலைமையை வலியுறுத்துகிறார். இதை முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 2 நாட்களாக நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட முயற்சி நடப்பதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "அதிமுக பொதுக்குழுவை 23-ம் தேதி நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் இணைந்து தான் அறிவித்தனர். இப்போது பொதுக்குழு வேண்டாம் என்று ஓபிஎஸ் ஏன் சொல்கிறார்? அவரை யாரும் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டவில்லை. அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றைத்தலைமையாக ஈபிஎஸ் வர வேண்டும் என்று தான் வலியுறுத்துகின்றனர்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT