பிரசாந்த் கிஷோர் ஒரு தொழிலதிபர் என்றும் , அவர் ஒரு பாஜக ஏஜென்ட் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பு நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஜேடியு தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், “ பிரசாந்த் கிஷோர் கட்சியில் சேருவதற்கு ஜேடியு தரப்பில் இருந்து எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அவர் ஒரு தொழிலதிபர், எனவே அவரது வணிகத்தை வளர்க்க மார்க்கெட்டிங் செய்கிறார். அவரே முதல்வரைச் சந்திக்க விரும்பினார்” என்று கூறினார்.
மேலும், “பிகே என அழைக்கப்படும் அவர், பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார் பாஜகவின் ஏஜென்ட்களில் ஒருவர் ஆர்சிபி சிங் எங்களிடம் சிக்கினார். இப்போது புதிய ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறது பாஜக. இப்போது பாஜக தனது கட்சியை வெகுஜன அடித்தளத்தின் அடிப்படையில் வளர்க்க விரும்பவில்லை. அது சதித்திட்டத்தின் கீழ் கட்சியை வளர்க்க விரும்புகிறது. மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம் போன்றவற்றில் நடந்த கட்சித்தாவல்கள் போல கட்சியை வளர்க்க விரும்புகிறது” என தெரிவித்தார்
பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் நிதிஷ் குமாரை சந்தித்தப் பின்னர் அவர் மீண்டும் ஜேடியுவில் இணைவார் என்ற வதந்திகள் பரவின. நிதிஷ்குமாருடனான சந்திப்புக்கு பின்னர், மதுவிலக்கு தோல்வியடைந்தது குறித்து முதலமைச்சரிடம் கூறியதாகவும், அதை மறுஆய்வு செய்ய பரிந்துரைத்ததாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.