அரசியல்

`குஜராத்துக்கு 608 கோடி; தமிழகத்துக்கு 33 கோடியா?'- மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் கமல்ஹாசன்

காமதேனு

கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதிலும் ஓரவஞ்சனைதானா எனத் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதை விட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது எவ்வகையிலும் நியாயமற்றது. அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளது. அதில், கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், பிஹார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைவிடத் தமிழகத்துக்குக் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பயிற்சியாளர்களும் டெல்லிக்கு 121 பேர், அசாமுக்கு 56 பேரை பணியில் அமர்த்திவிட்டு, தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளனர். தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர். அவர்களை ஊக்குவிப்பதை விடுத்துவிட்டு மாநிலத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா? மத்திய அரசிற்கு அதிக வட்டி வசூலித்துத் தரவும், சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதிலும் ஓரவஞ்சனைதானா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT