அரசியல்

‘தமிழ்நாடு வாழ்க’ - கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் பரபரப்பு போஸ்டர்!

காமதேனு

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு வாழ்க என சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ரவியின் கருத்தினைத் தொடர்ந்து இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை, தமிழகம் என அழைக்கலாம் என்றார்போல் பேசியது பல தரப்பினரிடையே விமர்சனத்திற்கு உள்ளானது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் அவ்வாறு கூறியது ஏற்கத்தக்கது அல்ல எனவும், தமிழ்நாடு என்றுதான் கூற வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ஆளுநர் பேசியது பிரிவினை வாதத்தை தூண்டுவதற்காக இல்லை எனவும் அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் தமிழகம், தமிழ்நாடு குறித்து அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை லங்கா கார்னர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கோவை மத்திய மாவட்டம் சார்பில் தமிழ்நாடு வாழ்க என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பாரதியார் போல வேடம் அணிந்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கோவை மாநகரில் சில பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தினர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

SCROLL FOR NEXT