அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி மைத்ரேயனை நீக்குவதாக, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் எம்.பி-யான மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று சென்னை, எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவர் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்தபோது, ‘அணிகள் இணைந்தாலும், மனதால் இணையவில்லை’ என வருத்தத்தோடு பகிர்ந்திருந்தார் மைத்ரேயன்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அவருக்கு முக்கியத்துவம் மிக்க எந்தப் பொறுப்பும் வழங்காத நிலையில் அதிருப்தியில் இருந்த மைத்ரேயன், இப்போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றார். மைத்ரேயன் அதிமுகவில் இணைவதற்கு முன்னர் பாஜகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!