அரசியல்

பாஜகவால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

காமதேனு

பாஜகவால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களை மக்கள் அடக்கி வைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் உதய்பூர் காங்கிரஸ் கொள்கைப் பிரகடனம் பயிற்சி முகாம் தொடங்கியது. அகில இந்தியக் காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமின் போது செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி நேற்று கூறுகையில் “காங்கிரஸ் கட்சிக்குக் கிராம அளவில் நிறையக் கிளைகள் இருக்கின்றன. நாங்கள் அவற்றை முழுமையாகக் கணக்கு எடுக்கவில்லை. டிஜிட்டல் மெம்பர்ஷிப் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வந்திருக்கிறது. கையால் எழுதுவதை ஒழுங்காகக் கணக்கு எடுக்கவில்லை என்பதால்தான் டிஜிட்டல் உறுப்பினர் அட்டையை ராகுல் காந்தி கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்திலேயே எல்லா ஊர்களிலும், எல்லா தெருக்களிலும் உறுப்பினர்கள் உள்ள கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது.

பாஜகவை ஆட்சி செய்யத்தான் மக்கள் அழைத்திருக்கிறார்கள். இதைவிடுத்து அல்லா என்ன சொன்னார், ஏசு என்ன சொன்னார் எனச் சொல்வதற்கு அவர்கள் இல்லை. அல்லாவைப் பற்றிப் பேச முல்லா இருக்கிறார். ஏசுவைப் பற்றிப் பேச பிஷப் இருக்கிறார். இதுவரை உள்ளூரில் தகராறு செய்தது போதாது என்று என உலகம் பூராவும் தகராறு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் அடுத்த உலகப் போர் இவர்களால் உருவானாலும் உருவாகும். மக்கள் இவர்களை அடக்கி வைக்க வேண்டும். நேற்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் சில ஆதீனங்களும், சில சாமியார்களும் கடுமையாகப் பேசி இருக்கிறார்கள். அது தவறான வாதம். எங்களை விட இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் யாராவது இருக்கிறார்களா? 5000 ஆண்டுகளாகத் தீண்டத் தகாதவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். கோயில்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்கிறார்கள். அரசாங்கம் தலையிடாத துறைகள் ஏதாவது உண்டா? கோயில்களில் தவறுகள் இருந்தால் நீங்கள் குரல்கொடுங்கள். நாங்களும் உங்களுக்காக குரல் கொடுக்கிறோம் ” என்றார்.

SCROLL FOR NEXT