அரசியல்

புதுவையில் பதுங்கியிருந்த கிஷோர் கே சுவாமி: அதிகாலையில் அதிரடியாக கைது செய்தது போலீஸ்!

காமதேனு

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட அரசியல் விமர்சகரும், யூடியூப்பமான கிஷோர் கே சுவாமியை புதுச்சேரியில் இன்று அதிகாலையில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொலைக்காட்சி விவாதங்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிராகவும், திமுக தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்தைப் பதிவு செய்து வருபவர் கிஷோர் கே.சுவாமி. பாஜக ஆதரவு நிலைபாடு கொண்ட இவர், மாற்று அரசியல் கருத்துடையவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அத்துடன் பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து வெளியிட்டதாகவும் அவர் மீது புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நவ.1-ம் தேதி சமூக வலைதளத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து, முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் கிஷோர் கே.சுவாமி அவதூறு வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார், வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால் அவர் முன்ஜாமீன் கேட்டு, மனுதாக்கல் செய்தார். மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று அதிகாலையில் கிஷோர் கே.சுவாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT