தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் தேவை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், " விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.
இதுபோன்ற கோரச் சம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பலநேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம். இப்போது அப்படியில்லாமல் தமிழ்நாடு காவல்துறை, கள்ளச்சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணை போவோர் உள்ளிட்ட அனைவர் மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும். கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.