அரசியல்

`இப்படிப்பட்டவர்களால் தான் பாஜகவுக்கு அவப்பெயர்'- கொந்தளிக்கும் சசிகலா புஷ்பாவின் கணவர்

காமதேனு

"பாஜகவில் இருக்கும் ஒழுக்கமற்ற சிலரால் பாஜகவுக்கு இதுபோன்ற அவப்பெயர் ஏற்படுகிறது" என்று சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி கொந்தளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இமானுவேல் சேகரன்

நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவிடம், பொன்.பாலகணபதி அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம், பரமக்குடியில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பாவிடம், பாஜக மாநில பொதுச்செயலாளர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் வரும் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், மனைவிக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி கூறுகையில், "தான் அன்று முதல் இன்று வரை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். பாஜக, பெண்களை காப்பாற்றும் கட்சி. அதே நேரத்தில் பாஜகவில் இருக்கும் ஒழுக்கமற்ற சிலரால் அந்த கட்சிக்கு இதுபோன்ற அவப்பெயர் ஏற்படுகிறது. அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் இது சரியாகிவிடும். இதுகுறித்து தனது மனைவி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சம்பவம் நடந்த அன்றைய தினமே புகார் அளித்தார். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை உறுதியளித்தார்" என்றார்.

SCROLL FOR NEXT