கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பெருமளவு பணம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளன.
ஊழல் இல்லாத, நேர்மையான, தேர்தலுக்கு பணம் கொடுக்காத ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசி வருகிறார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ஆனால் கர்நாடக மாநில பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், அங்கு தேர்தல் செலவுகளுக்காகவும் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதற்காகவும் தான் பயணித்த ஹெலிகாப்டரில் பெருமளவு பணத்தை கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை கர்நாடகாவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தேர்தல் பணிக்காக அண்ணாமலை நேற்று கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தார். அவரின் அந்த ஹெலிகாப்டர் பயணம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வந்த ஹெலிகாப்டரில் பைகளில் பெருமளவு பணம் கொண்டு வரப்பட்டது என்று உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய் குமார் சொர்கி குற்றம்சாட்டியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.