மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர். மதுரை எம்.பி தேர்தலில் களமிறங்குகிறாரா நடிகர் விஜய்?: போஸ்டர்களால் 'தெறி'க்க விடும் ரசிகர்கள்!
அரசியல்

மதுரை எம்.பி தேர்தலில் களமிறங்குகிறாரா நடிகர் விஜய்?: போஸ்டர்களால் 'தெறி'க்க விடும் ரசிகர்கள்!

காமதேனு

மதுரையில் நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் விஜய், அரசியலுக்கு வரப்போவதாக நீண்ட நாட்களாக பேச்சு அடிபட்டு வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் தனது திரைப்பட ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் அரசியல் ரீதியான கருத்துகளை தயங்காமல் நடிகர் விஜய் பேசி வருகிறார்.

இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட வேண்டும் என்றும், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திடீரென அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று மக்கள் மன்றத்தினருக்கு உத்தரவிட்டதால், நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறி தான் என்று தகவல் பரவியது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், ’2024 பாராளுமன்றமே, 2028-ன் சட்டமன்றமே ’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் 'விரைவில் மதுரையில் மாநாடு' என்றும் கூறப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மூலம், மதுரையில் மக்களவை தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்காக மாநாடு எதுவும் நடத்தப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT