உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்  நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்னிடம் உள்ளது: உண்மையை சொன்ன உதயநிதி ஸ்டாலின்
அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்னிடம் உள்ளது: உண்மையை சொன்ன உதயநிதி ஸ்டாலின்

காமதேனு

"நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது" என்று ரகசியத்தை உடைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமையுரையாற்றினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிதம்பரம் எம்பி தொல்.திருமாவளவன் முன்னிலை உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வார்கள். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறி வந்தது என்னவெனில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்பதே.

பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியினை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நான் மோடியை சந்தித்தபோது கூட நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தேன். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்'' என்றார்.

SCROLL FOR NEXT