ஆறுமுக சாமி ஆணையத்தினால் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளவர்களில் முக்கியமானவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், இந்நாள் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன். ஜெயலலிதாவை ஏன் வெளிநாடு அழைத்து செல்லவில்லை என்ற கேள்விக்கு, ‘அது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயல்’ என ராதாகிருஷ்ணன் பதிலளித்ததாகவும், கால்நடை மருத்துவரான அவரை மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது எனவும் ஆணையம் கோபமாக தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையின் சாராம்சம் தெரிந்ததால்தான், அவர் சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் எனவும் இப்போது சொல்லப்படுகிறது. சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருடன் ராதாகிருஷ்ணனையும் விசாரிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் அவரின் தற்போதைய பதவிக்கும் ஆபத்து வந்துள்ளதாம். ராதாகிருஷ்ணன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு சட்ட ஆலோசனைகளை தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.