சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் 
அரசியல்

`ஆகஸ்ட் 30 வரை ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது'- காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் தடை

காமதேனு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த நான்கு மாவட்ட செயலாளர்களை அவர்களது முன்ஜாமீன் மனுக்களில் சென்னை காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஈபிஎஸ் ஆதரவாளர்களான தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து அவர்கள் 37 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அதையேற்று ஆகஸ்ட் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யும் வரை மனுதாரர்களை கைது செய்யக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT