கார்த்தி சிதம்பரம் எம்.பி 
அரசியல்

சீமான் கொள்கைகள் இல்லாத அரசியல்வாதி... கார்த்தி சிதம்பரம் பேட்டி!

காமதேனு

இந்தியாவில் அடிக்கடி தேர்தல் வந்தால் ஜனநாயகத்திற்கு நல்லது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி விபரீத முடிவுகள் எடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என கார்த்தி சிதம்பரம் எம்.பி காரைக்குடியில் தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம் எம்.பி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ‘’இந்தியாவில் அடிக்கடி தேர்தல் வந்தால் ஜனநாயகத்திற்கு நல்லது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி விபரீத முடிவுகள் எடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாரே தவிர சனாதனத்தை பின்பற்றுபவர்களை அல்ல. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிய பேச்சை திரித்து திசை திருப்புவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

சிறு வயதில் அண்ணாமலையை வழிபாட்டுக்கு அழைத்து சென்ற அவரது அம்மா, அப்பா போன்றவர்கள் சனாதனத்தை பின்பற்றலாம் என்றா அழைத்துச் சென்றிருப்பார்கள்? வட நாட்டுக்காரர்கள் சொல்வதை அண்ணாமலை அப்படியே கேட்டு பேசுகிறார். மோடி தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும்.

சீமான் கொள்கைகள் இல்லாத தற்காலிக வாக்கு வங்கி மட்டுமே வைத்துள்ள ஒரு அரசியல்வாதி என்றவர், நாம் தமிழர் கட்சியில் ஒருமுறை தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அடுத்த தேர்தலுக்கு அக்கட்சியிலேயே இருக்க மாட்டார்கள் என உறுதிபட தெரிவித்தார். அண்ணாமலையும், சீமானும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உள்ள ஒரு லட்சம் கோடி கடனை அடைக்க விவாதம் நடத்துவார்களா? என்றார்.

மேலும், தமிழகத்தில் கொலை, கொள்ளைகளுக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கையின் மூலம் தான் அதனை கட்டுப்படுத்த முடியும். போதை பொருள், கஞ்சா விற்பனை ஆகியவற்றை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT