அரசியல்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு பாஜகவில் புதிய பதவி!

காமதேனு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கிலை பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது. உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் முன்னாள் தலைவர்கள் மதன் கவுசிக் மற்றும் விஷ்ணு தியோ சாய், பஞ்சாபைச் சேர்ந்த ராணா குர்மித் சிங் சோதி, மனோரஞ்சன் கலியா மற்றும் அமன்ஜோத் கவுர் ராமுவாலியா ஆகியோர் தேசிய செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேப்டன் அமரீந்தர் சிங், கடந்த ஆண்டு உயர்மட்டக் கட்சித் தலைவர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்தும், பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்தும் விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அந்த கட்சியால் எந்த இடத்தையும் வெல்ல முடியவில்லை. அமரீந்தர் சிங் தனது சொந்த தொகுதியான பாட்டியாலா அர்பனில் தோற்றார். இதன் பின்னர் லண்டனில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்தார். தற்போது அவருக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT