அரசியல்

ஆரம்ப கட்டத்திலேயே வேலுமணி வழக்கை ரத்து செய்யக் கோரமுடியாது: சொத்துகுவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வாதம்

காமதேனு

தன்னுடைய வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காமலேயே தனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

தன் மீதுள்ள மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கையும், சொத்துக்குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்திருந்தார்.  அவரது  மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. இப்போது வழக்கறிஞர்கள் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். 

முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராஜு மற்றும் சித்தார்த் தவே ஆகியோர், "தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்தாலும், பொதுப்படையாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

மேலும், " உறவினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் வேலுமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உறவினரின் பணத்தை வேலுமணியின் பணம் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்த வழக்கறிஞர்கள், 2016ல் வேலுமணிக்கு  3 கோடி ரூபாய் சொத்து இருந்ததாகவும், 2021ல் அது 3.3 கோடி ரூபாயாக இருந்தது

வருமானத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்ட முடியாவிட்டால் தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிய முடியும். இந்த வழக்கில் வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காத நிலையில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது" எனவும் அவர்கள் வாதிட்டனர்.

தொடர்ந்து வழக்கில் புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, " புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது"  என்று  விளக்கமளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், " டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானது. அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று  விளக்கமளித்தார்.

இந்த அறிக்கை குறித்து விசாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், டெண்டர் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை எனவும், தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியலை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்ப கட்டம்தான் எனபதால் ஆரம்ப கட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக் கோரமுடியாது எனவும் தெளிவுபடுத்தினார்.

அதன்பின்னர், வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் 8- ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT