வருமானவரி அலுவலகம் 
அரசியல்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய ரூ.2.5 கோடி பதுக்கல்?... பெண் தலைமைக் காவலர் வீட்டில் திடீர் சோதனை!

காமதேனு

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின்  வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதாக 2.5 கோடி ரூபாய் பதுக்கி  வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, மோலாண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஆதிதமிழன் (எ) பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியாக உள்ளார்.  

இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக  2.5 கோடி பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வருமானவரித்துறை உதவியுடன் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றனர். தனது வீட்டில் சோதனை செய்ய பெருமாள் அனுமதிக்காத நிலையில் சுமார் அரை மணி நேர வாக்குவாதத்திற்கு பின் சோதனைக்கு அவர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

விட்டுக்குள் நடந்த சோதனையைத் தொடர்ந்து வீட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கார், கழிவறை, கொட்டகை என எதையும் விட்டுவிடாமல் சோதனை செய்தனர். சுமார் அரை மணி நேரம் நடந்த சோதனையில், வீட்டில் பணமோ, நகையோ எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகள் வெளியே வந்தனர். 

தேர்தல் நேரத்தில் யாரோ வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி தனது பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமாள் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT