மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, " குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும், துரோகிகளை தூள் தூளாக்குவோம் என வீர சபதம் ஏற்போம். நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து நாற்பதும் நமதே, நாளையும் நமதே என சூளுரைப்போம்" என்று ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன்பின் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது எடப்பாடி பழனிசாமி அவரையும் அறியாமல் கண்கலங்கினார்.
ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்துவதை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.