அரசியல்

ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினாலும் இரட்டை இலை சின்னம் முடங்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

காமதேனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தினால் கூட இரட்டை இலை சின்னம் முடங்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கே முழு உரிமை உள்ளது. அந்தச் சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். 2026-ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்" என்று கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தினால் கூட இரட்டை இலை முடங்காது. இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி. அது எந்த வகையிலும் நடக்காது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு , நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் ஏ படிவம் பி படிவத்தில் கையெழுத்திடும் உரிமை அவருக்கு மட்டும் தான் உள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT