அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு 
அரசியல்

பொதுச் செயலாளர் பதவியைப் பெற பெட்டிப்பெட்டியாக பணம் கொடுத்தவர் ஈபிஎஸ்: சாடும் அமைச்சர் தங்கம் தென்னரசு

காமதேனு

`நான்காண்டு கால ஆட்சியில் “ஊரெங்கும் ஊழல்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக,கரன்சி மழையில் நனைந்து, ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்தவர் பழனிசாமி'' என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ள நிலையில் அதுக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், முதல்வர் இன்ப சுற்றுலா சென்றுள்ளார் என விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் பழனிசாமி.

நான்காண்டு கால ஆட்சியில் “ஊரெங்கும் ஊழல்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக - கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்தவர் பழனிசாமி. தினமும் “எதைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற பாணியில், முதன்முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அதிமுக ஆட்சியை மறந்துவிட்டு , அதிமுக ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய பழனிசாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார்.

முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம், ஓபிஎஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம், அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம், வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம், எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற “பெட்டி பெட்டியாக” பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட “கான்டிராக்ட் ஊழல்” அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் பழனிசாமிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தை, முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT