ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மரணம்.
ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மரணம். தாயை இழந்து வாடும் அண்ணன் ஓபிஎஸ்: இரங்கல் அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்
அரசியல்

தாயை இழந்து வாடும் அண்ணன் ஓபிஎஸ்: இரங்கல் அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்

காமதேனு

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், கடந்த அதிமுக ஆட்சியில் துணைமுதல்வராகவும் பொறுப்பு வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இவரது தாயார் பழனியம்மாள் நாச்சியார் வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலன் குன்றியிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் காலமானார். அவருக்கு வயது 95.

இந்த தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சென்னையில் இருந்து தேனி புறப்பட்டுச் சென்றார். அங்கு பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயாரின் உடலுக்கு கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். இந்த தகவல் அறிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரியகுளத்தில் குவிந்தனர்.

இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின், ஓபிஎஸ்சின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். அத்துடன் தொலைபேசி வாயிலாக ஓபிஎஸ்சை தொடர்பு கொண்டு ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்," ஓபிஎஸ்சின் தாயாரின் மறைவு வருத்தமளிக்கிறது. தாயை இழந்து வாடும் அண்ணன் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT