ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் இந்த வழக்கு 17- ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக முதலமைச்செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நடை பயிற்சிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். பத்து ஆண்டுகளைக் கடந்தும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையே நீடித்து வருகிறது.
சிபிஐ, சிபிசிஐடி என பல்வேறு பிரிவினரின் விசாரணைகளைத் தொடர்ந்து தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் அமர்வில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினர் தமிழகத்தின் பிரபலமான 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்து, அதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
கடந்த நவ. 1-ம் தேதி மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற்ற இது குறித்த விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புதல் தெரிவிக்க அல்லது ஆட்சேபனையை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. ரவுடிகள் மோகன்ராம், தினேஷ், கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் எனும் லட்சுமிநாராயணன் , ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா கடலூர், சிறையில் இருக்கும் செந்தில் ஆகிய 13 பெரும் இன்று ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 9 பேர் மட்டும் இன்று ஜே எம் 6 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். திண்டுக்கல் மோகன்ராம், கணேசன், தினேஷ் , கடலூர் சிறையில் உள்ள செந்தில் ஆகியோர் ஆஜராகவில்லை.
இவர்களில் சாமி ரவி, சத்யராஜ், லட்சுமி நாராயணன், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜரான 9 பேரில் தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் ஏற்கெனவே தான் போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், அதனால் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் 17-ம் தேதியன்று ஆஜராகாத ரவுடிகளை கட்டாயம் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி சிவக்குமார், வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.