செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக ஒன்றியக்குழு பெருந்தலைவரின் கணவர் ஆந்திர காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஆந்திர காவல் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட செம்மர க் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். ஆரம்பக் காலத்தில் செம்மரக் கடத்தல் செய்யும் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். செம்மரம் வெட்டுபவர்கள், வியாபாரிகள் என இவரின் நெட்வொர்க் நாளுக்குநாள் விரிவடையத் தொடங்கியது. தானே சொந்தமாக இந்தத் தொழிலைச் செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்ற ஆசையின் காரணமாக ஓட்டுநர் தொழிலை விட்டுவிட்டுப் பல வருடங்களாக செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஆந்திராவில் தற்போது வரை அவர் மீது 12 செம்மர கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
பாதுகாப்பு வேண்டி அரசியலில் தஞ்சம் புக நினைத்த அவரை அதிமுகவினர் நிராகரித்தனர். இந்த நிலையில் அவரின் பார்வை திமுக பக்கம் திரும்பியது. உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவி சாந்தியை ஒன்றியக்குழு உறுப்பினராகப் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தார். அந்த தேர்தலில் திமுகவில் உள்ளவர்கள் தோல்வி அடைந்ததை அடுத்து திமுக சார்பில் போட்டியிட்டு ஒன்றிய குழுத்தலைவராக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். மனைவி சாந்தியின் ஒன்றியக்குழு தலைவர் வேலைகளை இவரே கவனித்து வந்தார். போளூர் ஒன்றிய அலுவலகத்தில் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் ஒருவரின் பணிநிறைவு விழாவிற்கு இவர் சென்று கொண்டிருந்த போது, ஆந்திர காவல்துறையினர் அவரை மடக்கி கைது செய்தனர்.