அரசியல்

தலைவர், பொதுச் செயலாளரை தேர்வு செய்ய அக். 9-ல் திமுக பொதுக்குழு: துரைமுருகன் அறிவிப்பு!

காமதேனு

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரைத் தேர்வு செய்வதற்காக அக்டோபர்  9-ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவில் ஒன்றிய அளவிலான உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. கடந்த சில தினங்களாக, மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மனுத் தாக்கல் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி அரங்கில் அக்டோபர் 9-ம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்வதற்காக பொதுக்குழு கூட்டப்படுகிறது. இந்த பொதுக் குழுக் கூட்டத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அன்றே தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT