கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது. எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் இருந்தே அவரது நூறாண்டு விழாவை கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதற்காக ஆலோசனை நடத்துவதற்காக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று முதல்வர் ஸ்டாலின் கூட்டினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கழக ஆட்சியும், கழகமும் ஒரே நேரத்தில் புகழும் அடைந்திருக்கிற இந்த நேரத்தில் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடி நூற்றாண்டு விழாவை கொண்டாடப்படுவது சிறப்புடையது.
ஜூன் 3 அன்று நூற்றாண்டு விழா மாநாடு திருவாரூரில் நடைபெறுகிறது. அதில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. அந்த மாநாட்டில் காலையில் தமிழ்நாட்டில் உள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய அளவில் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 3 தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3 வரையிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் கொண்டாடப் பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு ஒரு கோடி தொண்டர்கள் உள்ள திமுகவில் மேலும் ஒரு கோடி தொண்டர்களை சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கை ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி ஜூன் மூன்றாம் தேதியன்று கருணாநிதி பிறந்த நாளில் இலக்கை அடைவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துண்டறிக்கைகள், திண்ணைப் பிரச்சாரங்கள் மட்டுமின்றி வீடு தோறும் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், முகாம்கள் அமைத்து அதன் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைவர் பொறுப்பேற்றதற்கு பிறகு 2018-ல் இருந்து அனைத்துத் தேர்தல்களில் வெற்றியை பெற்றுள்ளோம், ஆறாவது முறையாக தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பை தமிழக மக்கள் வழங்கி இருக்கிறார்கள். கருணாநிதியின் வார்ப்பாக மட்டுமல்லாமல் கருணாநிதியாகவே செயல்பட்டு வருகிறார் என்று திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.