அரசியல்

பாஜக பிரமுகர் மனைவி, மகள் படங்கள் மார்பிங்: கைது செய்யப்பட்ட குறும்பட இயக்குநர்!

காமதேனு

பாஜக பிரமுகரின் குடும்ப பெண்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட குறும்பட இயக்குநர் சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், அய்யங்கோட்டையை சேர்ந்தவர் சிவராம். பாஜகவில் உள்ள இவர், வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த குறும்பட இயக்குநரான ராஜேஷ்குமார் என்பவரின் எதிர்த்தரப்புக்கு ஆதரவாக கோர்ட்டில் வழக்காடி வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்குமார், சிவராமுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிவராமின் மனைவி மற்றும் மகள்  புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்தும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராம் இது குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராஜேஷ்குமார் தலைமறைவானார். இதையடுத்து ராஜேஷ்குமாரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் காவல்துறையினர் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT