நடிகர் விஷால்
நடிகர் விஷால்  
அரசியல்

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக களமிறங்கப் போகிறாரா விஷால்?: முதல்வர் ஜெகன் மோகன் பிளான்

காமதேனு

ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக குப்பம் தொகுதியில் நடிகர் விஷாலை களமிறக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதையை முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது.

அதேபோல போட்டியிட்ட இன்னொரு கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஒரே ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது. பவன் கல்யான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஆந்திர முதல்வராக மக்கள் ஆதரவோடு அமோகமாக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

சந்திரபாபு நாயுடு

கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இம்முறையும் தனித்து களம் காண உள்ளார். கடந்த முறையைவிட இம்முறை அதிக தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வருகிறார். அதற்காக பல்வேறு உத்திகளையும் முன்கூட்டியே வகுத்துள்ளார். அதில் ஒன்றுதான் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக விஷாலை களமிறக்குவது.

தற்போதைய சூழ்நிலையில் ஆந்திராவில் தனக்கு நிகராக, வலுவான தலைவராக வலம் வரும் சந்திரபாபு நாயுடுவை எதிர்வரும் தேர்தலில் தோல்வி அடைய வைக்க வேண்டும் என்பது ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர விருப்பமாக இருக்கிறது. தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் குப்பம் தொகுதியில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பும் ஜெகன்மோகன் ரெட்டி அதற்காக வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஒரு பிரபலமான அரசியல் தலைவரை எதிர்த்து நிற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஷாலை ஜெகன்மோகன் ரெட்டி ஏன் தேர்வு செய்தார் என்பதற்கும் காரணங்களைச் சொல்கிறார்கள்.

குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே. அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.

குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெருமளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே அதிகம். இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமாக, அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமாக ஒருவரை தேர்வு செய்ய ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தபோதுதான் அதற்குப் பொருத்தமான நபர் விஷால் என்று புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும்,

அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்திருக்கிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி

நடிகர் விஷால் தமிழ் மக்களுக்கும், ஆந்திர மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர். விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக சித்தூர் மாவட்டத்தில் பல்லாண்டு காலம் தங்கி கல்குவாரி தொழில் செய்து வந்திருக்கிறார். குறிப்பாக குப்பம் தொகுதி முழுவதும் விஷாலிற்கு நன்கு தெரிந்த இடங்கள், அங்குள்ள மக்கள் பலருக்கும் அவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால்தான் அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி விஷாலை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது

இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து விஷாலிடம் இத்தகவலை சொல்லி விஷாலின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

SCROLL FOR NEXT