தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என பெரியாரை அவமரியாதை செய்யும் விதத்தில் பேசிய பாஜக நிர்வாகி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அந்நிகழ்வை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியின் படம் போட்டு பாஜகவினர் நிறைய போஸ்டர்களும் ஒட்டியிருந்தனர். ஆனால் இதில் பிரதமரின் படத்தில் சிலர் கரிபூசி அழித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டிப்பதாகச் சொல்லி, தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள தாருகாபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(28) என்பவர் தன் சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் பெரியாரை தரக்குறைவாக விமர்சித்திருந்ததுடன், பெரியாரின் உருவச்சிலைகளை உடைப்போம் எனவும் பேசியிருந்தார். இதுகுறித்து திராவிட இயக்க நிர்வாகிகள் புளியங்குடி போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் வீடியோ வெளியிட்ட கிருஷ்ணன் பாஜகவில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுப்பிரிவு தலைவராக இருப்பது தெரியவந்தது. கிருஷ்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153(ஏ), 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.