சாதிப் பெயரைச் சொல்லி வட்டார வளர்ச்சி அலுவலரைத் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம்மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) ராஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் 26-ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது உதவியாளர் மூலம் பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அவருடன் பணிபுரியும் மற்றொரு அரசு அலுவலரைச் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதன்பேரில் அமைச்சர் இல்லத்திற்கு மறுநாள் பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அன்பு கண்ணன் ஆகியோர் சென்றுள்ளார்.
அப்போது ராஜேந்திரனைப் பார்த்த அமைச்சர் ராஜகண்ணப்பன் , அவர் சாதி குறித்து இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத பிடிஓ ராஜேந்திரன், கண்கலங்கியபடி அமைச்சர் முன்பு நின்றார். ஆனாலும் தொடர்ந்து ராஜேந்திரனின் சாதிப் பெயரை இழிவாகச் சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரின் பேச்சைக் கேட்கவில்லை என்றால் பணியிட மாற்றம் செய்வதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதையடுத்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து பட்டியலின பிடிஓவை தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.