மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் என் மனம் குளிர்ந்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கடா கோவில் பகுதியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், " திமுக அரசியல் ஆட்சியில் இந்த நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். முடியாது என்று சொல்வதை முடித்துக்காட்டுவது தான் திமுக. நல்லாட்சியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத சாதனையை தமிழக அரசு செய்துள்ளது. ஒன்றை ஆண்டுகளில் ஒன்றை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
15 மாதங்களில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு என்பது எந்த யாரும் செய்யாத ஒரு சாதனை. அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுமே போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றன" என்றார்.