முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் மூன்று நாள் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். இதனையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு ஊட்டி கொடைக்கானல், ஏற்காடு ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மலர் ரகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பல்வேறு வடிவங்களில் மலர்கள் அலங்கரிக்கப்பட உள்ளன. குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ள மலர்களைக் காண ஜூன் 5-ம் தேதி வரை பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் காலை முதல் இரவு எட்டு மணி வரை மலர்களைப் பார்வையிட்டு ரசிக்கலாம். மலர் கண்காட்சியை கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் மாணவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.