அரசியல்

சேகுவேராவின் மகன் கமிலோ மரணம்: சோகத்தில் கியூபா!

காமதேனு

சேகுவேராவின் இளைய மகன் கமிலோ சேகுவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

“அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு; அவர்களுக்கு எனது போராட்டம் தேவையாக இருக்கிறது” எனத் தனது பரந்த சிந்தனை மூலம் உலகிற்கு அறியப்பட்டவர் சேகுவேரா. சேகுவேராவின் குடும்பம் சொந்தமாகத் தேயிலை, மூலிகை பண்ணைகளை வைத்து இருக்கும் அளவிற்கு வசதியான குடும்பம். இடதுசாரி குடும்பத்திலிருந்து வந்தவர் சேகுவேரா. எழுத்தாளர், மருத்துவர், புரட்சியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சேகுவேரா. 1954-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்த சேகுவேரா, கம்யூனிஸ்ட்டுகளிடம் நெருங்கிப் பழகினார். மார்க்சிய லெனினிய பாதையே தன் பாதை என்பதை உணர்ந்தார். கியூபா புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு கெரில்லா போர்முறை தாக்குதல் மூலம் பாடிஸ்டா ராணுவத்தை முடக்கி கியூபா விடுதலைக்கு வித்திட்டார். உலகப் புகழ் பெற்ற சேகுவேரா 1967-ல் பொலிவிய ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

சேகுவேராவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சேகுவேரா இறந்தவுடன் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குநராக இளைய மகன் கமிலோ இருந்தார். கமிலோ சேகுவேரா பொதுவாக விளம்பரங்களை விரும்பாதவர். இருப்பினும் அவர் சில சமயங்களில் தனது தந்தையைக் கௌரவிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவந்துள்ளார். சேகுவேராவின் படத்தை வைத்து மார்க்கெட்டிங் செய்வதை அவர் பயங்கரமாக எதிர்த்தார்.

கமிலோ சேகுவேரா வெனிசுலாவின் கராகஸ் நகருக்குச் சென்ற போது, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ப்ரென்சா லத்தினா தெரிவித்துள்ளது. கமிலோவின் மறைவுக்குக் கியூபா அதிபர் தனது ட்விட்டர் பதிவில், “ஆழ்ந்த வலியுடன், சேவின் மகனும் அவரது யோசனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT