தனக்கு எதிராக கேள்வி கேட்போரை அமலாக்கத்துறையை ஏவி மத்திய அரசு மிரட்டுவதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட பாசி கூட்டமைப்பு பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், "மீனவர்களுக்கு திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். மீனவர்களைப் பழங்குடியினரும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார். மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்போர் வருமான வரி, அமலாக்கத்துறைகள் மூலம் மிரட்டப்படுகின்றனர்" என்றார்.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகராட்சி தலைவர் கார்மேகம், மீன்பிடி தொழிலாளர் யூனியன் நிர்வாகி பால்சாமி உள்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.