மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு 
அரசியல்

குட்நியூஸ்... இனி கணவருக்கு இல்லை பென்ஷன்... குழந்தைக்குத் தான்!

காமதேனு

அரசு பெண் ஊழியர் உயிரிழந்தால் கணவருக்குப் பதிலாக குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் பெண் ஊழியர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற குடும்ப உறுப்பினர்கள், மனைவியின் தகுதியின்மையைப் பொறுத்தோ அல்லது அவரது மறைவுக்கு பிறகு மட்டுமே பென்ஷன் பெற தகுதி பெறுகின்றனர். இதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு பெண் ஊழியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. குறிப்பாக, விவாகரத்து நடவடிக்கைகள் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பதின் அவசியத்தை முன்வைத்து இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசு

இந்நிலையில், தற்போது இது தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு கணவருக்கு பதிலாக தனது குழந்தைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமனம் செய்யலாம்.

இது குறித்து தங்களின் அரசு துறைத் தலைவரிடம் அவர்கள் எழுத்து மூலமாக எழுதித் தர வேண்டும். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிக்கு பெண் ஊழியர்கள் வரவேற்பு

மேலும், ’பிரதமர் நரேந்திர மோடி அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சட்டபூர்வ உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பெண் ஊழியர் மரணம் அடையும் நிலையில், அவருக்கு தகுதி உள்ள குழந்தைகள் இல்லாவிட்டால், அவருடைய குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும். ஒரு வேளை அவரது குழந்தை மைனராக இருந்தாலோ, மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில் கணவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

அந்த குழந்தை உரிய வயதை அடைந்தவுடன் அந்தக் குழந்தைக்கே ஓய்வூதியம் அளிக்கப்படும். உயிரிழந்த பெண் ஊழியரின் குழந்தை தகுதிநிலையை எட்டாவிட்டாலும், குழந்தைகளுக்கே ஓய்வூதியம் வழங்கப்படும்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT