அரசியல்

அதிமுக அலுவலகத்தில் திடீரென நுழைந்த சிபிசிஐடி அதிகாரிகள்: அனைத்து அறைகளிலும் ஆய்வு!

காமதேனு

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தில் சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். மேலும் அங்கிருந்த வாகனங்களும் சூறையாடப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருவரும் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கில், சீல் அகற்றப்பட்டு, ஈபிஎஸ் தரப்பினரிடம் அலுவலக சாவி கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக எம்பி சி.வி. சண்முகம் அதிமுக அலுவலகத்தில் முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போனதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல உதவி ஆய்வாளர் காசு பாண்டி கொடுத்த புகாரில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஞ்சிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யும் பணியை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் சென்னை காவல்துறை சிபிசிஐடி போலீஸாரிடம் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை ஒப்படைத்த நிலையில் அதிமுக கலவரம் தொடர்பான 4 வழக்குகளில் இரண்டு வழக்குகளில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் இன்று காலை முதல் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ஜூலை 11-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT