அரசியல்

கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கு: நவ.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காமதேனு

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தத்தை எதிர்த்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் 'அறம் செய்ய விரும்பு' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 1975 முதல் 1977-ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வனம், நிர்வாகம், கல்வி,  நீதி நிர்வாகம் உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனவும்,  கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, அரசியல் சட்ட பிரச்சினை தொடர்பான இந்த வழக்கை  மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.அதன்படி, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில், முழுமையான இறுதி விசாரணைக்கு முன் வழக்கு ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 7- ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT