அரசியல்

திருமாவளவனை மிரட்டிய வழக்கில் பாஜக தலைவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

கி.மகாராஜன்

திருமாவளனுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன். இவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம், பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன்காந்தி ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து மகா சுசீந்திரன் மீது சிலைமான் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மகா சுசீந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் இன்று விசாரித்தார். அப்போது, " மகா சுசீந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் இனிமேல் இவ்வாறு பேசமாட்டேன் என கீழ் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை சிலைமான் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்" என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT