கோவையில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக மே 17 இயக்கம் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத் தில் ஈடுபட்டு தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று இரவு ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவரும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் வந்த பாஜகவினர் மே 17 இயக்கத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மிரட்டி எச்சரிக்கவும் செய்தனர். அதற்கு பதிலடியாக திருமுருகன் காந்தியும் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இடத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி முழக்கம் எழுப்பிய நிலையில் தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமரசப்படுத்தினர்.
ஆனபோதும், இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். மே 17 இயக்கத்தினரின் பிரச்சாரத்தை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மே 17 இயக்கத்தினர் உரிய அனுமதி பெற்று பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அந்த இயக்கத்தினர் அணிந்திருந்த டீசர்ட்டுகளை கழற்றுமாறு பாஜகவினர் வலியுறுத்தினர். இதனால் போலீஸாருக்கும் மே 17 இயக்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனாலும் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.