பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய அரசு 'இசட்-பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கியதையடுத்து, அவர் தனக்கு பஞ்சாப் மற்றும் டெல்லியில் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஞ்சாப் அரசு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் பகவந்த் மானுக்கு பஞ்சாப் மற்றும் டெல்லியில் இருக்கும் பாதுகாப்பு போதுமானது என்று தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் அவருக்கு பாதுகாப்பு தேவையென்றும் தெரிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் சமீபத்தில் குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றார்.
இசட் பிளஸ் பாதுகாப்புக்காக பஞ்சாப் அரசிடமிருந்து இந்த வினோதமான கோரிக்கை வந்ததாக மத்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் டெல்லியில் படைகளை ஆய்வு செய்வதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.