பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் விரைவில் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த ஆண்டு பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் அம்ரீந்தர் சிங். அதன்பிறகு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி கடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து களமிறங்கி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவில் இணைந்த பிறகு அமரீந்தர் சிங் அக்கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்படலாம் என்று பஞ்சாப் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர்களான 4 முன்னாள் அமைச்சர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். தற்போது முதுகு அறுவை சிகிச்சைக்காக அமரீந்தர் சிங் லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் அவர் நாடு திரும்பியதும் இரு கட்சிகளின் இணைப்பு செயல்முறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.