அரசியல்

ஈபிஎஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

காமதேனு

11 மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுப்பப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்கு அடிப்படை  முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.  அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், உதகமண்டலம், உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளை கட்ட  கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

1 லட்சத்து 77 ஆயிரத்து 482 சதுர அடி கட்டிடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் 52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து பெரும்தொகை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டிடம்) ராஜ்மோகன், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோர்  இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கடந்த 2021 -ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்'  என கூறியுள்ளார்..

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,  'மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது. 

எனவே அரசின் ஒப்புதலுக்காக  ஊழல் கண்காணிப்புத்துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார். அதனையடுத்து  'தமிழ்நாடு காவல்துறை இந்த புகார் குறித்து விசாரிப்பதாக கூறும்போது, சி.பி.ஐ. விசாரணை ஏன் கேட்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை  டிசம்பர் 20-ம் தேதிக்கு  தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT