ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்ற திமுக அமைச்சர்கள்.
ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்ற திமுக அமைச்சர்கள். ஓபிஎஸ்ஸுக்கு எழுந்து நின்று வணக்கம் சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
அரசியல்

ஓபிஎஸ்ஸுக்கு எழுந்து நின்று வணக்கம் சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

காமதேனு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் வளர்மதி ஆகியோர் எழுந்து நின்று வணக்கம் வைத்த சம்பவம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஈபிஎஸ் அணியின் நிரந்தர எதிரியாக பார்க்கப்படுவர் ஓபிஎஸ். சமீபத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓபிஎஸ் சந்தித்தப் போது துரோகமும், துரோகமும் இணைந்துள்ளதால் அது பூஜ்ஜியம் என்றெல்லாம் அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதிமுகவில் திமுகவின் பி டீமாக செயல்பட்ட பச்சோந்தி ஓபிஎஸ் என கடுமையான வார்த்தைகளால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வசைப்பாடி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் வளர்மதி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் வந்ததும் திமுக அமைச்சர்கள் வரிசையாக எழுந்து நின்று அவரை வரவேற்றனர். இந்தநிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் வளர்மதி அதிமுகவுக்கே உரிய அதே பணிவோடு ஓபிஎஸ்சை வரவேற்றும் வணக்கம் வைத்தனர்.

அவர்களை ஓபிஎஸ் கண்டு கொள்ளாத நிலையில், அவர் கவனிக்கும் வரை இருவரும் வணக்கம் வைத்தனர். இதுகுறித்து விமர்சனம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஓபிஎஸ் மீது முன்னாள் அமைச்சர்களுக்கு பழைய பாசமும், பணிவும் துளி கூட இன்னமும் மாறவில்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT