அரசியல்

`நோட்டாவுடன் போட்டியிடும் பாஜகவிடம் அதிமுக காத்துக்கிடக்கிறது’- தயாநிதிமாறன் விமர்சனம்

காமதேனு

``பாஜகவினர் முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து கொண்டு இருந்தனர். தற்போது பாஜக காலில் அதிமுகவினர் விழும் நிலைமை வந்துவிட்டது'' என திமுக எம்பி தயாநிதிமாறன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரத்தில் நவீன வசதியுடன் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இளைஞர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறன், ``கொள்ளை வாசல் வழியாக பாஜக தமிழகத்தை ஆட்டி படைக்கலாம் என்று இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு இங்கே நடந்த சதுரங்க ஆட்டத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருந்தது. பாஜகவினர் முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து கொண்டு இருந்தனர். பிறகு தற்போது பாஜக காலில் அவர்கள் விழும் நிலைமை வந்துவிட்டது.

இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லக்கூடிய அதிமுக நோட்டாவிற்கு போட்டியிடுகின்ற பாஜக அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை வைத்து பார்த்துவிடலாம் அதிமுகவின் நிலைமை எந்த அளவிற்கு கீழே சென்றுள்ளது'' என்று விமர்சனம் செய்தார்.

SCROLL FOR NEXT