நடிகர் வடிவேலு 
அரசியல்

தமிழக அரசியலில் பரபரப்பு... திமுக வேட்பாளராக களமிறங்கும் நடிகர் வடிவேலு?

காமதேனு

நடிகர் வடிவேலுவுக்கு திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் வடிவேலு

தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத சக்தி என்றால் அது வடிவேலு தான். வாழ்வில் எந்த சூழலிலும் வடிவேலுவின் காமெடி பொருத்தமானதாக அமைந்திருக்கும். துயரமானதாக இருந்தாலும், மிக,மிக சந்தோஷமானதாக இருந்தாலும் இக்கட்டான நிலை ஏற்பட்டாலும் எல்லா இடத்திற்கும் அவரது பொருத்தமான காமெடி ஒன்று நினைவுக்கு வரும். அவர் திரை உலகில் தீவிரமாக தற்போது காணப்படவில்லை என்றாலும் அவரது மீம்ஸ்கள் தான்  எல்லா சூழலுக்கும் பொருத்தமானதாக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது திரை வாய்ப்புகள் குறைந்து போனதற்கு காரணம் அவர் திமுகவுக்கு ஆதரவாக கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்தது தான் என்று கூறப்படுகிறது. அப்போது நடிப்பு உலகில் உச்சத்தில் இருந்து வந்த வடிவேலை திமுக தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைத்தது. வடிவேலுவும் தமிழ்நாடு முழுவதும் திமுக மேடைகளில் பிரச்சாரத்தை பலமாக மேற்கொண்டார். அதிலும் குறிப்பாக அப்போது விஜயகாந்த்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்.

நடிகர் வடிவேலு

ஆனால் அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை ஜெயலலிதா முதலமைச்சரானார். அதனால் அவருக்கு பயந்து திரையுலகில் யாரும் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமும் அவர் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்து வந்தார் என்ற போதிலும் ஒரு சில படங்களில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த படங்களும் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தார் வடிவேலு.

இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த நடிகர் வடிவேலு, தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் குறித்தும், திமுக மற்றும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசத் தொடங்கியுள்ளார். அதிலும் 'மாமன்னன்' படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்த பிறகு திமுகவுடன் அவரது நெருக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி சமாதிக்கு நேற்று சென்று சுற்றிப் பார்த்த அவர், இது சமாதி இல்லை சன்னதி என்று புளகாங்கிதம் அடைந்தார்.

மேலும் தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன் என்றும், ஆனால், கலைஞரின் தீவிர அபிமானி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது தங்களால் பாதிக்கப்பட்ட வடிவேலுவுக்கு ஒரு வாய்ப்பு வழங்க திமுக முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை திமுக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வடிவேலுவுடனும் கலந்துரையாடப்பட்டிருப்பதால் அதற்கு அவரும், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.  எனவே எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலு திமுக சார்பில் போட்டியிடப் போகிறார் என்பதாக தகவல்கள் பரபரத்துக் கிடக்கின்றன.

SCROLL FOR NEXT