ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார களத்தில், தனது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எழுந்த பிரச்சினையை முன்வைத்து, ஜெயலலிதா - கருணாநிதி என இருபெரும் அரசியல் ஆளுமைகளுக்கு இடையிலான தனது அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘’ஒரு சின்னத்தில் நின்றுவிட்டு தற்போது வேறு சின்னத்திற்காக ஓட்டுக் கேட்டு வந்துள்ளேன் என நீங்கள் நினைக்கலாம். நாட்டில் சர்வதிகார போக்கு தலை தூக்குகிறது. அதனால் யாருடன் கை கோர்க்க வேண்டும் என எனக்கு நன்கு தெரியும். அதனால் தான் இங்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன்.
ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் உறவினர்கள் தான். விஸ்வரூபம் படத்தின் போது என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். அப்போது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கலைஞர் கருணாநிதி ’பயப்படாதே’ என்றார். ’உதவி வேண்டுமா’ எனக் கேட்டார். ’இது நாட்டு பிரச்சனையல்ல என் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என கூறினேன். என்னுடைய கடனையெல்லாம் தீர்த்து தற்போது எந்த லாபமும் எதிர்பார்க்காமல் வந்துள்ளேன்.
இங்கே வந்திருப்பதன் நோக்கம் நமது நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக! அதற்காகத்தான் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். அவருக்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்’’ என்று கமல்ஹாசன் பேசினார்.